மோட்டார் சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் கைது

விருகம்பாக்கம், நடேசன் நகரில் உள்ள பூங்காவிற்கு வருபவர்களின் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் கைது
Published on

பூந்தமல்லி,

விருகம்பாக்கம், நடேசன் நகரில் உள்ள பூங்காவிற்கு வருபவர்களின் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம் போலீசார் ஆற்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே மோட்டார்சைக்கிளில் வந்த 2 சிறுவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த வண்டிக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாதது தெரியவந்தது.

இது குறித்து கேட்டபோது சிறுவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், 15 மற்றும் 17 வயதுடைய அந்த சிறுவர்கள் இருவரும் விருகம்பாக்கம், தாங்கல் தெருவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து விருகம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார்சைக்கிள்களை திருடி விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 3 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com