மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்: என்ஜினீயர் பலி; நண்பர் படுகாயம் பழனி அருகே பரிதாபம்

பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்: என்ஜினீயர் பலி; நண்பர் படுகாயம் பழனி அருகே பரிதாபம்
Published on

பழனி,

பழனி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்லசாமி மகன் மனோஜ் (வயது 22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக மனோஜ் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மனோஜ், தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கருப்பசாமி ஓட்டினார்.கணக்கன்பட்டி அருகே உள்ள ஒரு வளைவு பகுதியில் வந்தபோது, எதிரே பழனியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்து கருப்பசாமி உயிருக்கு போரா டிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கருப்பசாமியை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் விடுமுறையில் ஊருக்கு வந்த இடத்தில் விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com