மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; 2 வயது பெண் குழந்தை பலி

பூந்தமல்லி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வயது பெண் குழந்தை பலி. கணவன், மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; 2 வயது பெண் குழந்தை பலி
Published on

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கெலட்டிப்பேட்டையை சேர்ந்தவர் கமல்(வயது 30). கார் டிரைவர். இவருடைய மனைவி புவனேஷ்வரி(30). இவர்களுடைய மகன் சந்திரேஸ்(4). இவர்களுக்கு 2 வயதில் சஞ்சனா என்ற மகளும் இருந்தாள்.

நேற்று முன்தினம் மாலை கமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் அம்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை கமல் ஓட்டினார். முன்னால் மகள் சஞ்சனாவும், அவருக்கு பின்னால் மனைவி மற்றும் மகன் சந்திரேசும் அமர்ந்து இருந்தனர்.

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லியை அடுத்த வடக்கு மலையம்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கமலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய கமல், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் என 4 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து, காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு பூந்தமல்லியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குழந்தை சஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தது. கமல், அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மணிகண்டன்(34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com