மோட்டார்சைக்கிள்கள் மோதல்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் பலி

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் பலியானார்.
மோட்டார்சைக்கிள்கள் மோதல்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் பலி
Published on

காவேரிப்பட்டணம்,

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள நாசன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 44). இவர், காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தராஜ் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டணம்-பாலக்கோடு செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

வரட்டம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் கோவிந்தராஜ் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கோவிந்தராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com