மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: சிறுவன் பரிதாப சாவு

நெல்லை பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயம் அடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: சிறுவன் பரிதாப சாவு
Published on

பேட்டை,

நெல்லை பேட்டை திருமங்கை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புவனேசுவரி. மாநகராட்சியில் தற்காலிக சுகாதார பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இவர்களுடைய மகன் குருமூர்த்தி (வயது 9). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 4-வது வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் குருமூர்த்தி தனது பெரியப்பா மாரியப்பன், பெரியம்மா பரமேசுவரி (32) ஆகியோருடன் சூரசம்ஹார நிகழ்ச்சியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றான்.

பேட்டை முனிசிபல் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவர்களது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அந்த மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பரமேசுவரி மற்றும் குருமூர்த்திக்கு காயம் ஏற்பட்டது. இதில் குருமூர்த்தி அங்கு தேங்கி கிடந்த தண்ணீருக்குள் விழுந்து பலத்த காயம் அடைந்தான்.

காயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் குருமூர்த்தி நேற்று பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com