மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி

திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி
Published on

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றம் அடுத்த அட விளாகம் கிராமம் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 27). இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த தயாளன் (24) மற்றும் விஜய் (20) ஆகியோரும் சென்றனர்.

வழுவதூர் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிரே செய்யூர் தாலுகா நீலமங்களம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (22) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளில், எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் படுகாயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள் விபத்தில் சிக்கிய 4 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சொக்கலிங்கம் மற்றும் சரண்ராஜ் ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காயமடைந்த மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com