மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளர் கைது

மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளர் கைது
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் திருவண்ணாமலை டவுன் போலீசார் திருவண்ணாமலை அரசு கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அவரிடம் சுமார் 12 பவுன் நகைகள் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

தூய்மை பணியாளர் கைது

விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரதாப் (வயது 30) என்பதும், திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக தற்காலிகமாக பணி செய்ததும் தெரியவந்தது. மேலும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள மாற்றத்திறனாளி ரமேஷ் என்பவரின் வீட்டில் புகுந்து நகைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 12 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com