கொலை மிரட்டல் விடுத்த அண்ணன்-தம்பி கைது

கொலை வழக்கை வாபஸ்பெறவேண்டும் என கொலையுண்டவரின் குடும்பத்துக்கு கூலிப்படை மூலம் கொலை மிரட்டல் விடுத்த புகாரின்பேரில் திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் நேற்று கையெழுத்து போட வந்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கொலை மிரட்டல் விடுத்த அண்ணன்-தம்பி கைது
Published on

பெரம்பூர்,

சென்னை முத்தமிழ் நகர் வடகிழக்கு சாலையை சேர்ந்தவர் மொய்தீன் ஆரிப்(வயது59). இவர் சென்னை கொடுங்கையூரில் இரும்புக்கடை நடத்தி வந்தார். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த அபிராமம் ஆகும்.

இவர் இங்குள்ள இஸ்லாமியர்களின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியாக கடந்த 2 ஆண்டுக்கு முன் செயல்பட்டு வந்தார். இவருக்கும் முன்னாள் நிர்வாகியான ஜவருல்லாகானுக்கும் அறக்கட்டளை நிதி தொடர்பாக கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் மொய்தீன் ஆரிப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக அபிராமம் போலீசார் நடத்திய விசாரணையில் ஜவருல்லாகான் மகன்களான சையது இப்ராகிம் என்ற அசான்(34), சதாம் உசேன்(27) ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை அபிராமம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அண்ணன்-தம்பி 2 பேரும் திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் 2 பேரும் கூலிப்படை மூலம் கொலை வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்றும் இதில் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் மொய்தீன் ஆரிப் மகன் ஜாவித்(32) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ஜாவித் கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வரும்போது கொடுங்கையூர் தனிப்படை போலீசார் அண்ணன்-தம்பியை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com