கிராம நிர்வாக அலுவலர் மர்ம சாவு

கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் இறந்தார்.
கிராம நிர்வாக அலுவலர் மர்ம சாவு
Published on

வேப்பந்தட்டை:

கிராம நிர்வாக அலுவலர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 49). இவர் வேப்பந்தட்டை வடக்கு கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் பணி முடிந்து, வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் ஆரோக்கியசாமி வீட்டிற்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி சுவேதா, தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரவு முழுவதும் வருவாய்த்துறையினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் ஆரோக்கியசாமி கிடைக்கவில்லை.

இறந்து கிடந்தார்

இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் பெரியம்மாபாளையம் பிரிவு சாலை அருகே சாலையோரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆரோக்கியசாமி இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்துவிட்டு அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆரோக்கியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து யாரேனும் முன்விரோதம் காரணமாக ஆரோக்கியசாமியை அடித்து கொலை செய்தனரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தாரா? அல்லது விபத்தினால் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ஆரோக்கியசாமிக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிராம நிர்வாக அதிகாரி சாலையோரத்தில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com