திருத்தணி அருகே ஆந்திர மாநில ஆட்டோ டிரைவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

திருத்தணி அருகே ஆந்திர மாநில ஆட்டோ டிரைவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி அருகே ஆந்திர மாநில ஆட்டோ டிரைவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியிலிருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் காவிரி ராஜபுரம் கிராமம் உள்ளது. இங்கு நேற்று காலை சாலை ஓரத்தில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது.

ஆட்டோவின் அருகில் ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகைய்யா (வயது 40) என்பது தெரியவந்தது. இவர் திருத்தணி அருகே பணப்பாக்கம் கிராமத்தில் இறந்த தன்னுடைய நண்பர் முனுசாமியின் துக்க நிகழ்வுக்காக வந்த நிலையில், சாலையோரம் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இவர் மது அல்லது விஷம் குடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com