

திண்டிவனம்
திண்டிவனத்தை அடுத்த கீழ்எடையாளம் பகுதியில், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் காளிதாசுக்கு ஆதரவாக கட்சியினர் ரேஷன் கடை அருகில் ஓட்டு சேகரித்தனர். அப்போது பா.ம.க வினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பா.ம.க. நிர்வாகிகள் தாக்கப்பட்டதோடு அவர்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இது குறித்து பா.ம.க. கிளை செயலாளர் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் செல்வசீமான் உள்பட 32 பேர் மீது மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட தமிழ், ஜெகதீசன் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும், செல்வசீமான், ராஜ்கமல், குப்புசாமி, ரவீன்ராஜ், கார்த்திக், மதன், துளசி, சுதாகர், அலெக்சாண்டர், இருசன் ஆகிய 10 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா 1,500 அபராதம் விதித்தும், அபராதத்தொகையை கட்டத்தவறினால், மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தும் நீதிபதி சுதா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரில் 20 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற தமிழ் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.