

நாகர்கோவில்,
நாகர்கோவில் நகரில் விதிகளை மீறி சில கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு நாகர்கோவில் நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி நேற்று மதியத்துக்கு பிறகு உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலாளர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனர்.
முதலில் கலெக்டர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு வணிக நிறுவன கட்டிடம், கே.பி.ரோட்டில் செயல்பட்டு வரும் ஒரு ரத்த பரிசோதனை நிலையம், வெட்டூர்ணிமடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஆகியவற்றுக்கும் சீல் வைக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சில வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம். கால அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவு படி சீல் வைக்கிறோம். அதனால் எங்களால் கால அவகாசம் அளிக்க முடியாது என்று கூறி, சீல் வைத்தனர்.