

நாகர்கோவில்,
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரை சேர்ந்தவர் மேரி ரோசியா (வயது 35), தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை அங்குள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்துக்கு நடந்து சென்றார். கிறிஸ்துநகர் பிரதான சாலை வழியாக சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 மர்ம நபர்கள் வந்தனர். அப்போது திடீரென மேரி ரோசியா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மர்ம நபர் பறித்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் உடனே நகையை கைகளால் பிடித்துக்கொண்டு மர்ம நபர்களிடம் போராடினார்.
இந்த போராட்டத்தில் நகை அறுந்து விட்டது. அதில் 1 பவுன் நகை மேரி ரோசியாவின் கையில் இருந்தது. மீதமுள்ள 9 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். உடனே மேரி ரோசியா திருடன், திருடன் என சத்தம் போட்டார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கைவரிசை காட்டி விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். பின்னர் இதுபற்றி நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதே சமயத்தில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது, ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக யாரேனும் சென்றால் உடனே பிடிக்கும்படி கூறினர். ஆனாலும் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் நகையை பறித்த சம்பவம் பதிவாகி இருந்தது. ஆனால் மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் முகத்தை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். ஆலயத்துக்கு சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.