நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை

நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை
Published on

செய்யாறு,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவினால் சிறு, குறு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலையில் வறுமையில் வாடி வரும் நாதஸ்வர தவில் கலைஞர்கள் நிவாரண உதவிக் கேட்டு நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 3 மாதங்களாக அனைத்து திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வாழ்வாதாரமின்றி மிகவும் சிரமமான முறையில் வாழ்ந்து வருகிறோம். நாதஸ்வர, தவில் இசை கலைஞர்களுக்கு தனியாக வாரியம் எதுவும் இல்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதனால் முதல்- அமைச்சர் எங்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து நிவாரண உதவித்தொகையை வழங்க வேண்டும். மேலும் நமது மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. கோவில் ஒன்றுக்கு 1 நாதஸ்வரம், 1 தவில் வாரியாக நியமனம் செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் நேற்று செய்யாறு உதவி கலெக்டர் அலுவலக வாயிலில் 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் நாதஸ்வரம், தவில் இசைத்தனர். பின்னர் நிவாரணம் கேட்டு கோரிக்கை மனுவினை உதவி கலெக்டர் கே.விமலாவிடம் முடிதிருத்துவோர் முன்னேற்ற சங்க தலைவர் கே.மதி, சட்ட ஆலோசகர் கே.விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com