ஆம்பூர் அருகே, தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு

ஆம்பூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பள்ளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.
ஆம்பூர் அருகே, தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு
Published on

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பெரியவரிகம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக அந்த பகுதியில் சுமார் 3 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடைய மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 1) நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது குழந்தை தவறி பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை.

இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இல்லாததை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பள்ளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி குழந்தை பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்து பெற்றோர், உறவினர் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com