ஆண்டிப்பட்டி அருகே, பெண் நில அளவையரிடம் 10 பவுன் நகை பறிப்பு

ஆண்டிப்பட்டி அருகே பெண் நில அளவையரிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே, பெண் நில அளவையரிடம் 10 பவுன் நகை பறிப்பு
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வருபவர் பாத்திமாபீவி (வயது 53). இவர், தனது உதவியாளர் முருகேசன் என்பவருடன் க.விலக்கு அருகே உள்ள திருமலாபுரம் பகுதியில் நில அளவை பணிக்கு சென்றனர். பின்னர் பணியை முடித்து விட்டு பாத்திமா பீவி உதவியாளருடன் மோட்டார் சைக்கிளில் தாலுகா அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

க.விலக்கு அமிர்தா காலனி அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், பாத்திமாபீவி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை கண்இமைக்கும் நேரத்தில் பறித்தனர். இதனால் பாத்திமாபீவியும், உதவியாளர் கணேசனும் கூச்சல் போட்டனர்.

ஆனால் நகையை பறித்து கொண்டு மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து பாத்திமாபீவி க.விலக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி பகுதியில் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com