அந்தியூர் அருகே, தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை

அந்தியூர் அருகே தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அந்தியூர் அருகே, தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை
Published on

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 40). இவர் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடுவில் தங்கியிருந்து உர தொழிற்சாலை நடத்தி வந்தார். அவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு லக்ஷனா, தர்ஷனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இவர்கள் 3 பேரும் வேம்பத்தி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் முனுசாமிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தலையொட்டி ஓட்டுப்போட முனுசாமி ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று வீட்டில் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

நேற்று காலை மனைவியும், மகள்களும் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருந்தனர். முனுசாமி வீட்டின் உள்ளே இருந்தார். அப்போது அவர் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

சிறிது நேரம் கழித்து 3 பேரும் உள்ளே சென்று பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே முனுசாமியை தூக்கில் இருந்து மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனுசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com