ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற லாரியை துரத்திய யானைக்கூட்டம் - தொடர் அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் பீதி

ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற லாரியை யானைகள் கூட்டமாக துரத்தின. யானைகளின் தொடர் அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.
ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற லாரியை துரத்திய யானைக்கூட்டம் - தொடர் அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் பீதி
Published on

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனச்சரகம் வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த வனச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே சென்ற போது ரோட்டோரம் கூட்டமாக சுற்றி திரிந்த யானைகள் நடுரோட்டுக்கு வந்தன.

யானைகளை பார்த்ததும் டிரைவர் அச்சத்தில் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். யானைகள் லாரியை துரத்தியபடி பின்னால் சிறிது தூரம் ஓடி நின்று கொண்டன.

கரும்புகளை சுவைத்து பழகிய யானைகள் தற்போது எந்த வாகனங்கள் வந்தாலும் வழி மறிப்பது வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்துவரும் காட்டுயானைகளால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com