ஆத்தூர் அருகே, தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

ஆத்தூர் அருகே தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர் அருகே, தாயை அடித்துக் கொன்ற மகன் கைது
Published on

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் வீரபுத்திரன். அவருடைய மனைவி நட்டாரம்மாள் (வயது 61). வீரபுத்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நட்டாரம்மாள் கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் மாயாண்டி (32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் மாலையில் மாயாண்டி மது குடித்துவிட்டு வீட்டுக்கு சாப்பிட வந்தார். சாப்பிட்டு விட்டு, தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது தாயாரிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாயாண்டி அங்கு கிடந்த கம்பை எடுத்து நட்டாரம்மாள் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர் அவர் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, நட்டாரம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மாயாண்டியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவரை போலீசார் நேற்று முக்காணி பஸ் நிறுத்தம் பகுதியில் வைத்து கைது செய்தனர். தாயை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com