ஆத்தூர் அருகே தொழில் அதிபர் கடத்தலில் மேலும் ஒருவர் கைது

ஆத்தூர் அருகே தொழில் அதிபர் கடத்தலில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர் அருகே தொழில் அதிபர் கடத்தலில் மேலும் ஒருவர் கைது
Published on

சேலம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராய புரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). தொழில் அதிபரான இவர், பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். மேலும், கர்நாடகாவில் தனது தந்தையுடன் சேர்ந்து கிரானைட் கல்குவாரியும் நடத்தி வருகிறார். இவரை கடந்த மாதம் மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. இதுபற்றி மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த மறுநாள் இரவு கடத்தப்பட்ட தொழில் அதிபரை சேலம் அருகே அல்லிக்குட்டையில் அந்த கும்பல் விடுவித்தது. அதன்பிறகு சுரேஷ்குமாரிடம் போலீசார் விசாரித்தபோது, கடத்தல்காரர்கள் தன்னிடம் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கடத்தலில் ஈடுபட்டதாக சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த கும்பல் தலைவி ஜெயந்தி (37), அவரது அண்ணன் செந்தில்குமார் (39), அஸ்தம்பட்டியை சேர்ந்த தீபக்ராஜ் (34), சுரேஷ்குமாரின் உறவினரான ஹரிபிரசாத் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

ஹரிபிரசாத் கொடுத்த தகவலின்பேரில் ஜெயந்தி தலைமையிலான கடத்தல் கும்பல் திட்டமிட்டு, பணம் பறிப்பதற்காக தொழில் அதிபர் சுரேஷ்குமாரை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கைதான 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், இக்கடத்தலில் ஈரோடு, திருப்பூரை சேர்ந்த மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில், திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன் (44) என்பவர் நேற்று முன்தினம் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com