பாகூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம் அமைச்சரின் ஆதரவாளர் கொலையில் 4 பேர் சிக்கினர் போலீசார் துருவி துருவி விசாரணை

பாகூர் அருகே அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர் கொலையில் தொடர்புடைய 4 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.
பாகூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம் அமைச்சரின் ஆதரவாளர் கொலையில் 4 பேர் சிக்கினர் போலீசார் துருவி துருவி விசாரணை
Published on

பாகூர்,

கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன். காங்கிரஸ் பிரமுகரான இவர் அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர்.

தேர்தல், முன்விரோதத்தில் எதிர் தரப்பினரால் கடந்த 2017-ம் ஆண்டு வீரப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது மைத்துனர் சாம்பசிவம் (வயது 36) முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இவரும் அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இளைஞர் காங்கிரசில் பொறுப்பில் இருந்தார்.

வீரப்பன் கொலை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் தனது தங்கை திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு நேற்று முன்தினம் சாம்பசிவம் காரில் வந்தார். கிருமாம்பாக்கம் பள்ளிக்கூடம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் வழிமறித்து வெடிகுண்டு வீசி சாம்பசிவத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.

இந்த பயங்கர கொலை சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டதையொட்டி கிருமாம்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசில் சாம்பசிவத்தின் உறவினர் ராஜதுரை புகார் செய்தார். அதில் கிருமாம்பாக்கம் அமுதன், கூடப்பாக்கம் அன்பு என்ற அன்பரசன், கெவின், மணிமாறன், சார்லஸ், மற்றொரு நபர் என 6 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

இவர்களில் 4 பேர் தற்போது போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் குடும்பத்துடன் டெல்லி சென்று இருந்த அமைச்சர் கந்தசாமி நேற்று காலை புதுவை திரும்பினார். சாம்பசிவம் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் திட்டமிட்டு தனது ஆதரவாளர்கள் கொலை செய்யப்படுவதாகவும், சாம்பசிவத்தை கொல்ல திட்டமிட்டு இருந்ததை தெரிந்து கொண்ட பிறகும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சாம்பசிவத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சரிடம் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் சாம்பசிவத்தின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் கந்தசாமி அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கிருந்தவர்கள் அமைச்சரை சூழ்ந்து கொண்டு ஆளும் கட்சியினருக்கே பாதுகாப்பு இல்லை. இன்னும் அந்த கும்பல் யாரை கொலை செய்யப்போகிறதோ என கண்ணீர் விட்டபடி கதறினர். அவர்களை அமைச்சர் கந்தசாமி சமாதானப்படுத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்து கொலையாளிகளை கைது செய்யும் வரை சாம்பசிவத்தின் உடலை வாங்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

புதுவையில் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.யை சந்தித்து சாம்பசிவம் கொலை குறித்து அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த பயங்கர கொலை சம்பவத்தால் 2-வது நாளாக பதற்றம் நீடித்ததால் பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com