பெங்களூரு அருகே பிடதியில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் குத்திக் கொலை மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது

பெங்களூரு அருகே பிடதியில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் குத்திக் கொலை செய்யப்பட்டார். தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு அருகே பிடதியில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் குத்திக் கொலை மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது
Published on

ராமநகர்,

ராமநகர் மாவட்டம் பிடதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முத்துராயனகுடி கிராமத்தை சேர்ந்தவர் பன்னிகப்பா (வயது 35). இவர், முத்துராயனகுடி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்தார். மேலும் அவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கெஜ்ஜாலாவில் இருந்து பிடதி நோக்கி பன்னிகப்பா தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கெஜ்ஜாலா மெயின் ரோட்டில் வைத்து காரில் வந்த மர்மநபர்கள், பன்னிகப்பாவின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், பன்னிகப்பாவை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே மர்மநபர்கள் காரில் ஏறி சென்று விட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் பிடதி போலீசார் விரைந்து சென்று பன்னிகப்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது காரில் வந்த 5-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் பன்னிகப்பாவை குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் பஞ்சாயத்து தேர்தல் நடந்த பின்பு தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாக கூறி சமீபத்தில் பிடதி போலீஸ் நிலையத்தில் பன்னிகப்பா புகார் அளித்திருந்தார். ஆனால் கொலை மிரட்டல் வந்ததை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதன் காரணமாக மர்மநபர்கள் திட்டமிட்டு அவரை கொலை செய்திருந்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் முன்விரோதம் அல்லது நிலப்பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com