பரப்பாடி அருகே மழையில் சரிந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்: இறந்த பிளம்பரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் - ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு

பரப்பாடி அருகே மழையில் சரிந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இறந்த பிளம்பரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கலெக்டரிடம் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. மனு வழங்கினார்.
பரப்பாடி அருகே மழையில் சரிந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்: இறந்த பிளம்பரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் - ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு
Published on

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே பாப்பான்குளம் பஞ்சாயத்து காத்தநடப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுடலைமணி மகன் லிங்கத்துரை (வயது 32), பூரணச்சந்திரன் (52). பிளம்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் நெல்லையில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மழையின் காரணமாக, பரப்பாடி அருகே ஏமன்குளத்தை அடுத்த பொத்தையடி பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பம் சரிந்து சாலையின் குறுக்காக நின்றது. அந்த மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், லிங்கத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், வடக்கு விஜயநாராயணம் போலீசார் விரைந்து சென்று, லிங்கத்துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பூரணச்சந்திரன் பரப்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே லிங்கத்துரையின் குடும்பத்தினர் நேற்று வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தினர் பொத்தையடி பகுதியில் ஓடையின் அருகில் ஆழம் குறைவாக மின்கம்பத்தை நட்டியதால், மழையில் அது சாலையில் சாய்ந்தது. மின்வாரியத்தினரின் அலட்சியத்தால்தான் லிங்கத்துரை இறந்துள்ளார். எனவே மின்வாரியத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லிங்கத்துரையின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி, லிங்கத்துரையின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள், நாங்குநேரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர், தாசில்தார் நல்லையாவிடமும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

கிராம மக்களுடன் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகர் ரூபி மனோகரன், தாசில்தாரிடம் கோரிக்கை மனு வழங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இரவிலும் கிராம மக்களின் போராட்டம் நீடித்தது.

இதற்கிடையே கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் பெருமாள் உள்ளிட்டவர்கள், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷில்பாவிடம் மனு வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com