செய்யாறு அருகே, மாயமான மாணவன் கருகிய நிலையில் பிணமாக மீட்பு - கொலையா என போலீசார் விசாரணை

செய்யாறு அருகே மாயமான 9- ம் வகுப்பு மாணவன் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டான். அந்த மாணவன் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு அருகே, மாயமான மாணவன் கருகிய நிலையில் பிணமாக மீட்பு - கொலையா என போலீசார் விசாரணை
Published on

செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆற்காடு சாலை, பாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கார்த்தி(வயது 14), வீட்டு வசதி வாரிய அரசு உயர்நிலைப்பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 20- ந் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவன் மாலையில் வீடு திரும்பினான். அதன்பின்னர் சைக்கிளில் வெளியே சென்று வருதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த தந்தை ராமகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் செய்யாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்தி குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பைங்கினர் கிராம ஏரிக்கு செல்லும் கால்வாயில் மாணவனின் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக செய்யாறு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாயமான கார்த்தியின் பெற்றோரும் அங்கு வரவழைக்கப்பட்டபோது இறந்து கிடப்பது கார்த்தி என்பது தெரியவந்தது.

கார்த்தி உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. உடல் மற்றும் முகம் கருகியதுபோல் இருந்தது. அந்த இடத்தில் மதுபாட்டில்களும் இருந்தன. இதனால் மது குடித்தவர்கள் கார்த்திக்கை அடித்துக்கொன்று உடலை ஏரியில் வீசினார்களா? அல்லது அந்த பகுதியில் மின்வேலியில் சிக்கியதில் இறந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கார்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே சாவில் உள்ள மர்மம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com