திண்டுக்கல் அருகே பரபரப்பு: தலையில் கல்லை போட்டு கணவரை கொலை செய்த பெண்

சின்னாளப்பட்டி அருகே குடிபோதையில் தொடர்ந்து சித்ரவதை செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண் கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் அருகே பரபரப்பு: தலையில் கல்லை போட்டு கணவரை கொலை செய்த பெண்
Published on

சின்னாளப்பட்டி,

சின்னாளப்பட்டி அருகே உள்ள அ.வெள்ளோட்டை சேர்ந்தவர் ஜார்ஜ் குமார் (வயது 42). விவசாயியான இவர் தனது மனைவி பாத்திமா குழந்தை தெரசா, மகன்கள் வில்சன் (17), பில் கிளிண்டன் (15) ஆகியோருடன் செட்டியபட்டி அருகே சிறுமலை அடிவாரம் வேளாங்கண்ணிபுரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து வந்தார்.

இந்தநிலையில் ஜார்ஜ் குமார் நேற்று முன்தினம் மதியம் தனது தோட்டத்து வீட்டின் அருகே தலையில் பலத்த காயத்துடன் முகத்தின் ஒரு பகுதி சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால், அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் பிணமாக கிடந்த ஜார்ஜ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மர்மமான முறையில் இறந்த கிடந்த ஜார்ஜ் குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது ஜார்ஜ் குமாரின் மனைவி பாத்திமா குழந்தை தெரசாவிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்த பாத்திமா குழந்தை தெரசா ஒரு கட்டத்தில் தனது கணவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீசாரின் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

ஜார்ஜ் குமார் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகன்களை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகன்கள் 2 பேரும் வெளியில் சென்ற நேரத்தில் மதியம் குடிபோதையில் வந்த ஜார்ஜ்குமார், மனைவியை வழக்கம் போல் அடித்து துன்புறுத்தி உள்ளார். அப்போது அவர் வீட்டுக்கு வெளியே ஓடினார். ஆனாலும் ஜார்ஜ்குமார் வெளியே வந்து மனைவியை அடிக்க வந்தார். அப்போது ஆத்திரம் அடைந்த பாத்திமா குழந்தை தெரசா, அவரை கீழே தள்ளினார். இதில் குடிபோதையில் இருந்த ஜார்ஜ்குமார் கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து அருகில் கிடந்த கல்லை பாத்திமா குழந்தை தெரசா எடுத்து கணவரின் தலையில் போட்டார். இதில் ஜார்ஜ் குமார் தலை மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து கணவரை கொலை செய்த மனைவி பாத்திமா குழந்தை தெரசாவை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com