எலச்சிபாளையம் அருகே, லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலி - தந்தை கண் எதிரே நடந்த பரிதாபம்

எலச்சிபாளையம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானார். தந்தை கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
எலச்சிபாளையம் அருகே, லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலி - தந்தை கண் எதிரே நடந்த பரிதாபம்
Published on

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு கிழக்கு முனியப்பன் கோவில் பழையபாவடி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரித்யா (16). இவர் எலச்சிபாளையம் அருகே சக்கராம்பாளையத்தில் உள்ள வித்யபாரதி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று பிரபாகரன், மொபட்டில் மகள் ரித்யாவை பள்ளியில் விட சென்று கொண்டிருந்தார். அப்போது எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ்நிறுத்தத்தில் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றது.

அந்த வேளையில் பிரபாகரன் பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது, ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று எதிர் திசையில் வந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரபாகரன் மொபட்டை திருப்பிய போது தனியார் பஸ்சில் இடித்து இடதுபுறமாக தவறி விழுந்தார். பின்னால் அமர்ந்து வந்த மாணவி ரித்யா வலதுபுறமாக கன்டெய்னர் லாரி வந்த திசையில் தவறி விழுந்தார். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் லாரியின் பின்பக்க சக்கரம் மாணவியின் மீது ஏறி இறங்கியது.

இதில் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி ரித்யா பரிதாபமாக இறந்தார். தனது கண் எதிரே மகள் இறந்ததை பார்த்து பிரபாகரன் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிபாளையம் போலீசார் பலியான மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com