எட்டயபுரம் அருகே கிரஷர் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி - தம்பி கண் எதிரே பரிதாபம்

எட்டயபுரம் அருகே தம்பியின் கண் எதிரே கிரஷர் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.
எட்டயபுரம் அருகே கிரஷர் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி - தம்பி கண் எதிரே பரிதாபம்
Published on

எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகள் மிக்கேல் அம்மாள் (வயது 40). இவர் திருமணமாகி, கணவரை விட்டு பிரிந்து, தன்னுடைய மகளுடன் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். இவர் அங்குள்ள பாறைப்பொடி தயாரிக்கும் (கிரஷர்) நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவருடைய தம்பி எட்வினும் அதே நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் அக்காள்-தம்பி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். மாலையில் மிக்கேல் அம்மாள், பாறைப்பொடி தூளாக்கும் எந்திரத்தில் (கிரஷர்) பாறாங்கற்களை தூக்கி போடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். எட்வினும் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது மிக்கேல் அம்மாளின் சேலை எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கியது. இதனால் சுமார் 5 அடி உயரத்தில் நின்ற அவர் நிலைதடுமாறி கீழே பாறாங்கற்களின் மீது விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று, எந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தினர்.

இறந்த மிக்கேல் அம்மாளின் உடலைப் பார்த்து அவருடைய தம்பி எட்வின் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கிரஷர் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த மிக்கேல் அம்மாளின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி கண் எதிரே அக்காள் கிரஷர் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com