கூடுவாஞ்சேரி அருகே நண்பர் வீட்டில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் 2 பேர் தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே நண்பர் வீட்டில் தங்கியிருந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி அருகே நண்பர் வீட்டில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் 2 பேர் தற்கொலை
Published on

வண்டலூர்,

சென்னை அருகே உள்ள பெரும்பாக்கம் கிருஷ்ணவேணி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவரும் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (25) ஆகிய இருவரும் காரப்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூரில் உள்ள தனது நண்பர் அசோக்குமார் என்பவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று தங்கியுள்ளனர்.

இதனையடுத்து அசோக்குமார் மேடவாக்கத்தில் உள்ள தனது மனைவியை அழைத்து வருவதற்காக இருவரையும் வீட்டில் தனியாக விட்டு விட்டு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்தாழ்ப்பாள் போட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவு தட்டியும், கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அசோக்குமார் ஜன்னல் வழியாக பார்த்த போது இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் உடனடியாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மணிகண்டன், ஏழுமலை ஆகிய இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ஏழுமலை ஆகிய இருவரும் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com