ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் இறந்து கிடந்த வெல்டிங் தொழிலாளி பிணத்தை மீட்டு - போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் இறந்து கிடந்த வெல்டிங் தொழிலாளி பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் இறந்து கிடந்த வெல்டிங் தொழிலாளி பிணத்தை மீட்டு - போலீசார் விசாரணை
Published on

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது 36), பெங்களூருவில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவரின் தந்தை சமீபத்தில் இறந்து விட்டார். தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த அவர், தினமும் மதுபோதையில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் மனைவி சங்கீதாவிடம் திருப்பத்தூர் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் மதியம் சங்கீதா தனது கணவருக்கு போன் செய்துள்ளார். அதற்கு அவர், பேங்க் வேலை சம்பந்தமாக வந்துள்ளேன். அதை முடித்து விட்டு வருவதாக கூறி உள்ளார். ஆனால் அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.

இதையடுத்து இரவு 7 மணிக்கு சங்கீதா மீண்டும் கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இரவு 9 மணிக்கு வீடியோ கால் மூலம் பேசி உள்ளார். அவர், மூக்கனூர் பகுதியில் இருப்பதாக தெரிவித்து, விரைவில் வீட்டுக்கு வருவதாக கூறினார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. மூக்கனூர் பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகில் அவரின் மோட்டார்சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. அவர் கிணற்றில் பிணமாக கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது. திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அழகேசன் பிணத்தை மீட்டனர். அவரின் முகத்தில் ரத்தகாயம் இருந்தது. அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com