

கலபுரகி,
கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா சிவாஜிநகர் அருகே வசித்து வருபவர் சஞ்சீவ் ரெட்டி. இவரது மனைவி இந்திரா (வயது 38). இந்த தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சேடத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக இந்திரா வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், தனது மனைவி இந்திராவிடம் பணம் கேட்டு சஞ்சீவ் ரெட்டி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்திராவை அவர் அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த இந்திரா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்தார்.
உடல் கருகி உயிருக்கு போராடிய இந்திரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இந்திரா பரிதாபமாக இறந்துவிட்டார். கணவரின் கொடுமை தாங்க முடியாமல் இந்திரா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சேடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சஞ்சீவ் ரெட்டியையும் போலீசார் தேடிவருகின்றனர்.