காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி

காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். உடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் செவிலிமேடு ரோட்டு தெருவில் வசிப்பவர் வீரபத்திரன். இவரது மகன் சதீஷ் (வயது 21). இவர் அங்குள்ள வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த விஜயன் (21). இவரும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும், காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார்சைக்கிளை விஜயன் ஓட்டி சென்றார். செவிலிமேடு பாலம் அருகே மோட்டார்சைக்கிள் சென்றபோது, பின்னால் மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில், சதீஷ், விஜயன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சதீஷ் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த விஜயனை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்துக்கு காரணமான கார் டிரைவர் காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com