கரூர் அருகே சாலையில் சிதறி கிடந்த பல்கலைக்கழக தேர்வு - விடைத்தாள்கள் போலீசார் விசாரணை

கரூர் அருகே சாலையில் சிதறி கிடந்த பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகே சாலையில் சிதறி கிடந்த பல்கலைக்கழக தேர்வு - விடைத்தாள்கள் போலீசார் விசாரணை
Published on

கரூர்,

கரூர் ஆர்.புதுக்கோட்டை அருகே உள்ள கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வாகனம் ஒன்று கரூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இதனால் அந்த வாகனத்தில் இருந்து திடீரென பேப்பர்கள் சாலையில் பறந்து விழுந்தன. ஆனால் அந்த வாகனத்தில் வந்தவர்கள் அதை கண்டு கொள்ளாமல் அப்படியே சென்று விட்டனர்.

இதைக்கண்ட அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் சாலையில் சிதறி கிடந்த பேப்பர்களை எடுத்து பார்த்தனர். அப்போது அது பல்கலைக்கழக தேர்வு எழுதிய மாணவர்களுடைய திருத்தப்படாத விடைத்தாள்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சிதறி கிடந்த அனைத்து தேர்வு விடைத்தாள்களையும் சேகரித்து அங்கு உள்ள கோவிலில் வைத்து விட்டு சென்றனர்.

இதனால் கரூர்-திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிதறி கிடந்த விடைத்தாள்களின் முன் பகுதியில் சென்னை பல்கலைக்கழகம் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனால் இந்த விடைத்தாள்கள் சென்னையில் இருந்து வந்ததா? அல்லது வேண்டும் என்றே விடைத்தாள்களை வாகனத்தில் இருந்து கீழே போட்டு விட்டு சென்றார்களா? அல்லது தானாகவே விடைத்தாள்கள் வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததா? அந்த வாகனத்தை ஓட்டி வந்தது யார்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் சாலையில் சிதறி கிடந்தது பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com