கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
Published on

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்துஜா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹரிணி (2) என்ற மகளும், 4 மாதத்தில் சுகாசினி என்ற மகளும் உள்ளனர். இந்துஜாவிடம் அவரது கணவர் கார்த்திகேயனும், மாமியார் ஜெயலட்சுமியும் சேர்ந்து அடிக்கடி தகராறு செய்ததால், கோபித்துக் கொண்டு செஞ்சி தாலுகா ஆனாங்கூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு இந்துஜா சென்று விடுவது வழக்கம். பின்னர் மகளை சமாதானம் செய்து மீண்டும் வேடநத்தம் கிராமத்திற்கு அவரது பெற்றோர் அனுப்பி வைப்பார்கள்.

இந்த நிலையில் நேற்று இந்துஜாவை அவரது கணவர் மற்றும் மாமியார் தகாத வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த இந்துஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி கெண்டு தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்துஜாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com