கோபி அருகே, ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

கோபி அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கோபி அருகே, ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
Published on

டி.என்.பாளையம்,

கோபி அருகே உள்ள நாயக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). தொழிலாளி. இவருடைய மகன்கள் ஹரி (21), பூபதி (19). இதில் பூபதி கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் கள்ளிப்பட்டி அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். ஆனால் பூபதி மட்டும் ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்துள்ளார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

உடனே இதுபற்றி பூபதியின் வீட்டுக்கு சென்று கூறினார்கள். அதைத்தொடர்து அவர்கள் அங்கு சென்று பூபதியை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் கள்ளிப்பட்டிக்கு சென்று ஆற்றில் இறங்கி பூபதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பூபதி பிணமாக மீட்கப்பட்டார்.

இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பூபதியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com