கோத்தகிரி அருகே, தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த கரடிகள் - தொழிலாளர்கள் பீதி

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்துக்குள் கரடிகள் புகுந்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
கோத்தகிரி அருகே, தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த கரடிகள் - தொழிலாளர்கள் பீதி
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, புலி, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் அவை புகுந்து விடுவது வழக்கமாகி உள்ளது. இதனால் அடிக்கடி மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அரவேனுவில் இருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையோரத்தில் கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகளுடன் கரடி புகுந்தது. அப்போது பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள், கரடிகளை கண்டு பீதியடைந்தனர். உடனே தோட்டத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் சிலர் கரடிகளை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். பின்னர் கரடிகள் அங்கிருந்து அருகிலுள்ள சாலையோரத்தில் உலா வந்தன.

சுமார் அரை மணி நேரம் அங்கேயே சுற்றித்திரிந்த கரடிகள், அதன்பிறகு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

இந்த கரடிகள் கடந்த 2 மாதங்களாக அரவேனு-அளக்கரை சாலையோரங்களில் நடமாடி வருகின்றன.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் எங்களை போன்ற தொழிலாளர்களும் கரடிகள் வந்து விடுமோ? என்ற அச்சத்திலேயே இருக்க வேண்டி உள்ளது. அவைகளால் மனிதர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன், கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com