கோட்டப்பட்டி அருகே, விவசாய கிணற்றில் ஆசிரியை பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

கோட்டப்பட்டி அருகே விவசாய கிணற்றில் ஆசிரியை பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோட்டப்பட்டி அருகே, விவசாய கிணற்றில் ஆசிரியை பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
Published on

அரூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாரதிபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜெயகாந்த். பெயிண்டர். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த விஜயலட்சுமி அப்பிநாயக்கன்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் மகளுடன் வசித்து வந்தார்.

மேலும் இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அரூர் அருகே உள்ள கட்டரசம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வருவதாக விஜயலட்சுமி தனது பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் காணவில்லை. இதுகுறித்து அவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று பொய்யப்பட்டியை சேர்ந்த சென்னகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்தனர். அப்போது பிணமாக கிடந்தவர் தனியார் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி என தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அடித்துக்கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com