கோட்டைப்பட்டினம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாய்மர படகு போட்டி

கோட்டைப்பட்டினம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
கோட்டைப்பட்டினம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாய்மர படகு போட்டி
Published on

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து வந்தனர். பின்னர் காளியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவில் விழாக்குழுவினர் சார்பில் வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள கடல் பகுதியில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பாய்மர படகுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசான ரூ.25 ஆயிரத்தை தொண்டி ஊரை சேர்ந்த படகிற்கும், 2-வது பரிசான ரூ.20 ஆயிரத்தை வடக்கு புதுக்குடி ஊரை சேர்ந்த படகிற்கும், 3-வது பரிசான ரூ.15 ஆயிரத்தை தொண்டி ஊரை சேர்ந்த மற்றொரு படகிற்கும், 4-வது பரிசாக ரூ.10 ஆயிரத்தை வல்லவன்பட்டினம் ஊரை சேர்ந்த படகிற்கும் வழங்கப்பட்டது.

படகு போட்டியை ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலோர காவல்குழுமத்தினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகம் மற்றும் பாய்மர படகு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராமமக்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com