

குடவாசல்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள உத்திரங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி அனுசுயா (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது. இந்தநிலையில் ஒரே வீட்டில் அருண்குமார், அனுசுயா, அருண்குமாரின் சகோதரர் பிரேம்குமார், அவரது மனைவி சரண்யா, மாமனார் கலியமூர்த்தி, மாமியார் சுசீலா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
தினமும் அனுசுயாவிடம் குடும்பத்தில் உள்ள அனைவரும் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை அருண்குமார் வெளியே சென்றுவிட்டார்.
அந்தநேரத்தில் அனுசுயா வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த அருண்குமார் அனுசுயா தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த அனுசுயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து குடவாசல் போலீஸ் நிலையத்தில் அனுசுயாவின் சகோதரர் பாரதிதாசன் புகார் கொடுத்துள்ளார். புகாரில் தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இறந்த அனுசுயாவிற்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் திருவாரூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.