கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 38). புகைப்பட கலைஞர். இவரது மனைவி தேவி (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் சுண்ணாம்புகுளம் அடுத்த செங்கல் சூளைமேடு கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த 12-ந்தேதி இரவு தலையின் பின்பகுதியில் வெட்டுகாயங்களுடன் முருகன் தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை செய்யப்பட்ட முருகனின் மனைவி தேவிக்கும், செங்கல்சூளைமேடு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் வினோத்(24) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வினோத்துடன் தேவி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இருவரையும் அழைத்து பேசி தேவியை அவரது கணவர் முருகனுடன் கிராம மக்கள் சேர்த்து வைத்தனர். இருப்பினும் தேவிக்கும் வினோத்துக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த முருகனை, தேவியுடன் சேர்ந்து திட்டம் போட்டு கடந்த 12-ந்தேதி வினோத் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையை அறிந்த வினோத் கடந்த 13-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முருகன் படுகொலை தொடர்பாக தேவியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடந்த 16-ந்தேதி அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் வினோத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அவரை கைது செய்வதில் போலீசாருக்கு தாமதம் ஏற்பட்டது.

தற்போது வினோத்துக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவரை நேற்று ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு வினோத்தை அழைத்துச் சென்ற போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு இரும்பு கம்பியை அதே பகுதியில் உள்ள முள்புதரில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

புகைப்பட கலைஞர் முருகன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட லாரி டிரைவர் வினோத்தை போலீசார் கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com