குன்னம் அருகே குளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலி

குன்னம் அருகே குளத்தில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
குன்னம் அருகே குளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயல்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரத்குமார்(வயது 23). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வயலப்பாடி கீரனூர் கிராமத்தில் உள்ள வட்டகுளத்தின் கரையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.

இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் குளத்தில் இறங்கி அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடி, சரத்குமாரை மீட்டனர். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சரத்குமாரின் உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த குன்னம் போலீசார் விரைந்து சென்று சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com