மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பள்ளி ஊழியர்கள் 2 பேர் பலி

மதுரவாயல் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பள்ளிக்கூட ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பள்ளி ஊழியர்கள் 2 பேர் பலி
Published on

பூந்தமல்லி,

திருவொற்றியூரை சேர்ந்தவர் நாகார்ஜூனா (வயது 24), இவரது நண்பர் ரமேஷ் (29). இருவரும் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் தங்கி நொளம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியர்களாக வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் வேலை முடிந்து நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் அயனம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு இருவரும் சென்று கொண்டிருந்தனர். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில், அடையாளம்பட்டு அருகே சென்றனர்.

அப்போது ஸ்ரீபெரும்புதூர் கார் கம்பெனி ஊழியர்களான அம்பத்தூரை சேர்ந்த திருமூர்த்தி(25), அவரது தம்பி அரிகிருஷ்ணன்(19) ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அடையாளம்பட்டு அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு பள்ளி ஊழியர்கள் நாகார்ஜூனா, ரமேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் எதிர்த்திசையில் வந்து மோதிய திருமூர்த்தி, அரிகிருஷ்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com