மணலி அருகே தொழிற்சாலையில் வாலிபர் மர்ம சாவு கன்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீஸ் விசாரணை

மணலி அருகே தொழிற்சாலையில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக கன்டெய்னர் லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மணலி அருகே தொழிற்சாலையில் வாலிபர் மர்ம சாவு கன்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீஸ் விசாரணை
Published on

திருவொற்றியூர்,

மணலி ஆண்டார்குப்பம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு நேபாளத்தை சேர்ந்த கவுதம் (வயது 21) என்ற வாலிபர் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கவுதம் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தார். பணி முடிந்து நேற்று காலை 7 மணியளவில் குளித்துவிட்டு தொழிற்சாலை வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தலையில் அடிபட்ட நிலையில் அவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

அதில், கவுதம் நின்றிருந்த போது கன்டெய்னர் லாரியை அதன் டிரைவர் பின்னோக்கி ஓட்டிச்சென்றதாக தெரியவந்தது. எனவே கன்டெய்னர் லாரியை டிரைவர் பின்னோக்கி ஓட்டிச்சென்ற போது லாரியில் அடிபட்டு கவுதம் இறந்தாரா? அல்லது யாராவது அவரை அடித்துக்கொலை செய்தனரா? என்பதை அறிய தொழிற்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் அதில் கேமரா பழுதாகி இருப்பது தெரிந்தது.

சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரியை பின்னோக்கி ஓட்டிச்சென்ற திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் வீரமணி (40) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கவுதம், கன்டெய்னர் லாரி மோதி இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com