மங்கலம்பேட்டை அருகே, முதியவர் அடித்துக் கொலை- தப்பி ஓடிய தந்தை-மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

மங்கலம்பேட்டை அருகே முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தப்பி ஓடிய தந்தை-மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மங்கலம்பேட்டை அருகே, முதியவர் அடித்துக் கொலை- தப்பி ஓடிய தந்தை-மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

உளுந்தூர்பேட்டை,

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பாரை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 75), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் இடையே நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அவர், தனது மகனுடன் சேர்ந்து அய்யாக்கண்ணுவை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அய்யாக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அய்யாக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார், தலைமறைவான தந்தை-மகனை வலைவீசி தேடி வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போதிலும், முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com