மாரண்டஅள்ளி அருகே யானை தாக்கி விவசாயி சாவு

மாரண்டஅள்ளி அருகே வனப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற விவசாயி யானை தாக்கி இறந்தார்.
மாரண்டஅள்ளி அருகே யானை தாக்கி விவசாயி சாவு
Published on

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கரிகுட்டனூரை சேர்ந்தவர் பொன்னுகான் (வயது 60). விவசாயியான இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்தார். இவர் நேற்று மாடுகளை சீங்காடு வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். பின்னர் மாலை அவர் மாடுகளை மீண்டும் வீட்டுக்கு ஓட்டி வந்தார்.

அப்போது வனப்பகுதியில் மறைந்து இருந்த ஒற்றை யானை திடீரென பொன்னுகானை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அப்போது கால் தவறி கீழே விழுந்த அவரை யானை தாக்கி காலால் மிதித்து தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வனப்பகுதிக்கு சென்றவர்கள் பொன்னுகான் யானை தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பொன்னுகானின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து சென்று உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் விரைந்து சென்று பொன்னுகானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற விவசாயி யானை தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com