மயிலம் அருகே, சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல், பதற்றம்-போலீஸ் குவிப்பு

மயிலம் அருகே சாமி ஊர்வலத்தின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மயிலம் அருகே, சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல், பதற்றம்-போலீஸ் குவிப்பு
Published on

மயிலம்,

மயிலம் அருகே உள்ள பொம்பூர் புதுக்காலனியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் சாகை வார்த்தல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் அம்மன் வீதிஉலா நடந்தது. அப்போது ஊர்வலத்தில் சென்றவர்களில் சிலர் பொம்பூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்துள்ளனர்.

இதை பார்த்த கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பஸ் நிறுத்தத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர். இதையடுத்து கிராம மக்களுக்கும், ஊர்வலத்தில் வந்த காலனி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இருதரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்டனர். மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த 3 பேரின் கரும்பு தோட்டத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையத் முகமதுஅலி தலைமையிலான போலீசார் மற்றும் வானூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சையத்முகமதுஅலிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தை அறிந்த விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்ரீஅபிநவ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (செஞ்சி) நீதிராஜ், (கோட்டக்குப்பம்) அஜய்தங்கம் ஆகியோர் விரைந்து வந்து இருதரப்பினரையும் அழைத்து சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையே அங்கு வந்த வானூர் வருவாய்த்துறையினர், மாரியம்மன் கோவிலுக்கு பூட்டு போட்டனர். இதனால் நேற்று நடைபெற இருந்த சாகை வார்த்தல் விழா நடைபெறவில்லை. மேலும் அங்கு இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் பொம்பூர் கிராமம் மற்றும் புதுக்காலனி பகுதியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பொம்பூர் கிராமத்தை சேர்ந்த ராமு (வயது 48), பாலச்சந்தர்(31), பிரசாந்த்(24), பாண்டிதுரை(26), சின்னவேல்(52), ஏழுமலை(30), பாக்கியராஜ்(34) மற்றும் புதுகாலனியை சேர்ந்த சதானந்தம்(26), திருமுருகன், சக்திவேல்(24), இளவரசு(23), ஜெயசங்கர்(42), மேகநாதன்(32), மோகன்தாஸ், நாகபாலன்(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே பூட்டிய கோவிலை திறக்கக்கோரியும், கைதானவர்களை விடுவிக்கக்கோரியும் புதுக்காலனியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக காலனி பகுதி பஸ் நிறுத்தத்துக்கு திரண்டு வந்தனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானப்படுத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

அதன்பிறகு காலனி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டிய கோவிலை திறந்து விட்டதோடு, திருவிழாவை பிரச்சினை இல்லாமல் நடத்திக் கொள்ளுமாறு விழா குழுவினரிடம் அறிவுறுத்தினர். சாமி ஊர்வலத்தின்போது இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com