மேட்டுப்பாளையம் அருகே, குடும்பத்தகராறில், தந்தையை மகனே அடித்துக்கொன்ற கொடூரம் - உடலை புதைக்க வீட்டுக்குள் குழி தோண்டியபோது சிக்கினார்

மேட்டுப்பாளையம் அருகே, குடும்பத்தகராறில் தந்தையை மகனே அடித்து கொன்றார். உடலை புதைக்க வீட்டுக்குள் குழி தோண்டியதால் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மேட்டுப்பாளையம் அருகே, குடும்பத்தகராறில், தந்தையை மகனே அடித்துக்கொன்ற கொடூரம் - உடலை புதைக்க வீட்டுக்குள் குழி தோண்டியபோது சிக்கினார்
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ள சின்னக்கள்ளிப்பட்டி சண்முகாபுரம் பழைய ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் மாகாளி (வயது 60). தொழிலாளி. இவரது மனைவி பூவாள் (52). இவர்களுடைய மகன் சிவராஜ் (40), கூலித்தொழிலாளி. சிவராஜுக்கு 3 மனைவிகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூவாள் இறந்துவிட்டார். இதன்காரணமாக மாகாளி தனியாக வசித்து வந்தார். மாகாளிக்கும், அவருடைய மகன் சிவராஜுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சிவராஜ் குடிபோதையில் மாகாளி வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் தந்தையும் மகனும், சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது தந்தையுடன் சிவராஜுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிவராஜ், வீட்டில் கிடந்த தோசை கரண்டியை எடுத்து, தந்தை என்றும் பாராமல் மாகாளியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு தலை உள்பட பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவராஜ், மாகாளியின் உடலை வீட்டிற்குள்ளேயே புதைப்பதற்காக குழி தோண்டினார். அப்போது அந்த வீட்டில் அதிகஅளவில் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மாகாளி வீட்டுக்கு வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை கண்டதும் சிவராஜ் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதையடுத்து பொதுமக்கள், சிவராஜ் தோண்டிய குழியின் அருகே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மாகாளி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இதுபற்றி சிறுமுகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி மற்றும் சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாகாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், சிவராஜ்தான் தந்தை என்று பாராமல் அடித்துக்கொன்றது தெரியவந்தது. வீட்டில் குழி தோண்டியபோது சத்தம் வந்ததால் சிவராஜ் சிக்கிகொண்டார். இதைத்தொடர்ந்து தப்பிஓடிய சிவராஜை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேட்டுப்பாளையம் அருகே தந்தையை மகனே அடித்துக்கொலை செய்து குழி தோண்டி புதைக்க முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com