மொரப்பூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்

மொரப்பூர் அருகே புதிய மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மொரப்பூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்
Published on

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கீழ் மொரப்பூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம் திடீரென புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதை அறிந்து கிராமமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஊழியர்கள் மதுக்கடையை திறக்க வந்தனர். மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், கடையை மூடக்கோரியும் சொக்கலிங்கம் தலைமையில் கீழ் மொரப்பூர், பறையப்பட்டி, தாமரைகோழியம்பட்டி ஆகிய கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கடையை முற்றுகையிட முயன்றனர். இதுகுறித்து ஊழியர்கள் மொரப்பூர் போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தர்மபுரி டாஸ்மாக் மேலாளர் சிவசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மதுக்கடையால் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும். இந்த கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக கலெக்டருடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் கடையில் இருந்த மதுபாட்டில்களை அதிகாரிகள் லாரியில் ஏற்றி எடுத்து சென்றனர். மதுக்கடையை மூடக்கோரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com