

திசையன்விளை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி செல்வசாரிஸ். இவருடைய மனைவி ரஜிலா (வயது 31). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் பலவீனமாக இருப்பதாக கூறி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே ஆம்புலன்சு சென்றபோது, ரஜிலாவிற்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து உடனடியாக டிரைவர் கல்யாணசுந்தரம் ஆம்புலன்சை சாலை ஓரம் நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி பிரசவம் பார்த்தார்.
மதியம் 1.15 மணிக்கு ரஜிலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது ரஜிலாவிற்கு 3-வது பிரவசம் ஆகும். தாயும், குழந்தையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். திசையன்விளை ஆம்புலன்சில் நேற்று பிறந்தது 12-வது குழந்தையாகும்.