நிலக்கோட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி படுகொலை துக்கம் விசாரிக்க சென்ற உறவினர் விபத்தில் பலி

நிலக்கோட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்டார். துக்கம் விசாரிக்க சென்றபோது விபத்தில் சிக்கி உறவினர் பரிதாபமாக இறந்தார்.
நிலக்கோட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி படுகொலை துக்கம் விசாரிக்க சென்ற உறவினர் விபத்தில் பலி
Published on

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி அருகே உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது 65). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (41). உறவினர்களான இவர்கள் 2 பேருக்கும் ஆவாரம்பட்டியில் அருகருகே தோட்டங்கள் உள்ளன. இது தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக அவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் தோட்டத்துக்கு சென்ற அவர்களுக்கிடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், முத்தையாவை சரமாரியாக தாக்கினார். அப்போது நிலைதடுமாறி முத்தையா கீழே விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத சதீஷ், அவர் மீது கல்லை தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து சதீசை வலைவீசி தேடி வருகிறார்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்து முத்தையாவின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து உடல் ஆம்புலன்சில் ஆவாரம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவருடைய உறவினர்கள் ஆம்புலன்ஸ் பின்னால் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் சென்றனர்.

ஆவாரம்பட்டியை சேர்ந்த மாயி (44) என்பவரும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்னால் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாயி உயிருக்கு போராடினார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்தில் பலியான மாயி, சித்தர்கள்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட குண்டலப்பட்டி கிராமத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com