ஒட்டன்சத்திரம் அருகே லாரி மீது கார் மோதல்; சிறுமி பலி

ஒட்டன்சத்திரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுமி பலியானாள். பெற்றோர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே லாரி மீது கார் மோதல்; சிறுமி பலி
Published on

ஒட்டன்சத்திரம்,

கோவையை அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 31). இவருடைய மனைவி ஜெயலட்சுமி (28). இவர்களுக்கு விதுசா (3) என்ற மகள் இருந்தாள். இந்தநிலையில், கடந்த 27-ந்தேதி சுப்ரமணி தனது மனைவி, மகள் மற்றும் உறவினரான ராஜேந்திரன் (48), அவருடைய மனைவி சுப்புலட்சுமி (39), மகள் தனலட்சுமி (21) ஆகியோருடன் தனது காரில் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், நேற்று முன்தினம் இடையர்பாளையத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சுப்ரமணி ஓட்டினார். அவர்களது கார் நேற்று முன்தினம் காலை 5 மணியளவில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் கள்ளிமந்தையத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. பெருமாள்கோவில்வலசுவில் உள்ள நால்ரோட்டில் வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இதனால், காரில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் அலறினர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி விதுசா பரிதாபமாக இறந்தாள்.

சுப்ரமணி உள்பட 5 பேரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com